யானை தாக்கியதில் படுகாயம் அடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி சாவு

குடியாத்தம் அருகே யானை தாக்கியதில் படுகாயம் அடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
யானை தாக்கியதில் படுகாயம் அடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி சாவு
Published on

குடியாத்தம்,

குடியாத்தம் வனச்சரகத்தில் உள்ள மோர்தானா, சைனகுண்டா, கொட்டமிட்டா, தனகொண்டபல்லி கிராமங்கள் ஆந்திர மாநில எல்லையோரம் உள்ளது. ஆந்திர மாநில காட்டுப்பகுதியில் இருந்து யானைகள் கூட்டம் தமிழக எல்லையோர கிராமப்பகுதிகளை ஒட்டியுள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது. வனத்துறையினர் பட்டாசு வெடித்தும், மேளங்கள் அடித்தும் காட்டிற்குள் யானைகளை விரட்டி வருகின்றனர்.

இந்த கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒற்றை யானை அடிக்கடி பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கு அருகே சுற்றித்திரிந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி காலையில் மோர்தானா மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்த சிலர் மோர்தானா அணை பகுதியில் மீன் பிடிக்க நடந்து சென்றனர்.

அப்போது காட்டுப்பகுதியில் இருந்து பிளறியபடி வந்த ஒற்றை யானை மீன் பிடிக்க சென்றவர்களை விரட்டி உள்ளது. அப்போது மோர்தானா பகுதியை சேர்ந்த தொழிலாளி கோவிந்தசாமி (வயது 60) என்பவரை யானை முட்டி தள்ளி தாக்கியதில் இடுப்பு மற்றும் முதுகு பகுதியில் எலும்பு முறிவும், தலையில் பலத்த காயமும் அடைந்தார்.

இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோவிந்தசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்து போன கோவிந்தசாமிக்கு தனலட்சுமி என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com