விருத்தாசலத்தில், மண்பாண்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விருத்தாசலத்தில் மண்பாண்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலத்தில், மண்பாண்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

விருத்தாசலம்,

விருத்தாசலம் பகுதியில் நடைபெறும் மண்பாண்ட தொழிலை பாதுகாத்திட வேண்டும், மழைக்காலங்களில் தொழில்செய்ய தனி கொட்டகை அமைத்து கொடுக்க வேண்டும், மண்பாண்ட தொழில் செய்ய மண் எடுத்துக்கொள்ள முழுமையான அனுமதி வழங்க வேண்டும், தண்ணீர் வசதியுடன் கூடிய களம் மற்றும் சூளை போட தனி இடம் அமைத்துத்தர வேண்டும், மண்பாண்ட பொருட்களை வாங்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மண்பாண்ட தொழிலாளர்கள் மற்றும் இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி தமிழ்நாடு தொழிற்சங்க கூட்டமைப்பு விருத்தாசலம் வட்டக்குழு சார்பில் விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதற்கு வட்ட செயலாளர் அய்யப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கோகுலகிறிஸ்டீபன் கண்டன உரையாற்றினார். இதில் நாகராஜ், கண்ணன், பாலகிருஷ்ணன், அந்தோணிசாமி, சங்கர், மீனாட்சி மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக மண்பாண்ட தொழிலாளர்கள் அனைவரும் தங்கள் தொழில் நலிவடைந்ததை அடையாளப்படுத்தும் வகையில் தாங்கள் செய்த பானைகள், மண் அடுப்புகளை தலையில் ஏந்தி விருத்தாசலம் பாலக்கரையில் இருந்து கோஷங்கள் எழுப்பியபடி பேரணியாக கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முடிவில் கோட்டாட்சியர் சந்தோசினி சந்திராவை சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனு கொடுத்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com