ரத்தினகிரி அருகே தொழிலாளி வீட்டில் 13 பவுன் நகை திருட்டு மேலும் 2 வீடுகளின் பூட்டும் உடைப்பு

ரத்தினகிரி அருகே தொழிலாளி வீட்டில் 13 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
ரத்தினகிரி அருகே தொழிலாளி வீட்டில் 13 பவுன் நகை திருட்டு மேலும் 2 வீடுகளின் பூட்டும் உடைப்பு
Published on

ஆற்காடு,

ரத்தினகிரி அருகே தொழிலாளி வீட்டில் 13 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். மேலும் 2 வீடுகளின் பூட்டும் உடைக்கப்பட்டது.

ரத்தினகிரியை அடுத்த பூட்டுத்தாக்கு மேல்மின்னல் புதுத்தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30), தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டிவிட்டு மேலகுப்பம் கிராமத்தில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று காலையில் மணிகண்டன் வீட்டிற்கு வந்த அவரது தந்தை மூர்த்தி வீடு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து மணிகண்டனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவர், வீட்டிற்கு வந்து பார்த்தபோது பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மேலும் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 13 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. திருட்டுபோன நகைகளின் மதிப்பு சுமார் ரூ.2 லட்சம் இருக்கும்.

இதேபோல் காமராஜர் தெருவில் உள்ள ஒரு வீட்டிலும், பாரதியார் தெருவை சேர்ந்த டிரைவர் வெங்கட்ராமன் என்பவரது வீட்டிலும் மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்துள்ளனர். பின்னர் அவர்கள், உள்ளே சென்று பீரோவையும் உடைத்துள்ளனர். அதில் பணம் மற்றும் நகைகள் எதுவும் இல்லாததால் அப்படியே விட்டு சென்றுள்ளனர்.

இதுகுறித்து ரத்தினகிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் வேலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் அங்கு வந்து தடயங்களை சேகரித்து சென்றனர்.

பூட்டுத்தாக்கு பகுதியில் தொடர்ந்து மர்ம நபர்கள் திருட்டில் ஈடுபடுவதால் இரவு நேரத்தில் போலீசார் ரோந்து செல்ல வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com