உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு மாமல்லபுரத்தில் கரகாட்டம் ஆடி மகிழ்ந்த வெளிநாட்டு பயணிகள்

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, மாமல்ல புரத்தில் தூய்மை விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் பொன்னையா தொடங்கிவைத்தார். இதில், கலந்து கொண்ட வெளிநாட்டு பயணிகள் தலையில் கரகம் வைத்து ஆடி, பாடி மகிழ்ந்தனர்.
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு மாமல்லபுரத்தில் கரகாட்டம் ஆடி மகிழ்ந்த வெளிநாட்டு பயணிகள்
Published on

மாமல்லபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் தமிழக சுற்றுலாத்துறை சார்பில் உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டது. மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் எஸ்.சக்திவேல் தலைமை தாங்கினார். காஞ்சீபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, திருக்கழுக்குன்றம் தாசில்தார் தங்கராஜ் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சீ புரம் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா கலந்துகொண்டு, வெளிநாட்டு பயணிகள், தனியார் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் தூய்மையை வலியுறுத்தும் விழிப்புணர்வு பேரணியை தொடங்கிவைத்தார்.

இந்த விழிப்புணர்வு ஊர்வலம் அர்ச்சுனன் தபசு அருகில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று, கிழக்கு ராஜ வீதி, கலங்கரை விளக்க சாலை வழியாக ஐந்தரத்தில் முடிவடைந்தது.

பிளாஸ்டிக் ஒழிப்பு, தூய்மையை வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் வானில் வண்ண பலூன்களை பறக்க விட்டனர். முன்னதாக விழாவில் கலந்து கொண்ட வெளிநாட்டு பயணிகளுக்கு தமிழ் கலாசாரப்படி மலர் மாலைகள் அணிவித்தும், குங்குமம் வைத்தும் சுற்றுலாத்துறையினர் வரவேற்றனர். பிறகு தமிழக கரகாட்ட கிராமிய குழுவினருடன் இணைந்து வெளிநாட்டு பயணிகள் சிலர் தலையில் கரகம் வைத்து நடனம் ஆடி மகிழ்ந்தனர்.

விழாவில், செங்கல்பட்டு பரதநாட்டிய பள்ளி மாணவிகளின் நாட்டிய நிகழ்ச்சி மற்றும் மகளிர் குழுவினரின் பாரம்பரிய உணவு கண்காட்சியும் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சுற்றுலா அலுவலர் வ.ராமதாஸ், தனியார் கல்லூரி முதல்வர் எஸ்.சேகர், மாமல்லபுரம் மூத்த சுற்றுலா வழிகாட்டி எம்.கே.சீனிவாசன், பரதநாட்டிய கலைஞர் மீனாட்சிராகவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com