

திருமயம்,
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டும் திருவிழா கடந்த 20-ந்தேதி மாலை வாஸ்து சாந்தி பூஜையுடன் தொடங்கியது.
தொடர்ந்து 21-ந்தேதி காலை கொடியேற்றம் நடைபெற்றது. 24-ந்தேதி மாலை கருட சேவை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் ஒவ்வொரு நாளும் மண்டகபடிதாரர்கள் சார்பில் சுவாமி வீதி உலா நடைபெற்றது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வைகாசி விசாக தேரோட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக காலையில் பெருமாளுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம் உள்பட 18 வகையான சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சத்தியமூர்த்தி பெருமாளை பக்தர்கள் பல்லாக்கில் தூக்கி வந்தனர்.
பின்னர் காலை 11 மணிக்கு சத்தியமூர்த்தி பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். இதைத்தொடர்ந்து திரளான பக்தர்கள் அதிர்வேட்டுகள், செண்டைமேளம், முழங்க கோவிந்தா... கோவிந்தா... என கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய நான்கு வீதிகள் வழியாக அசைந்தாடியபடி வந்தது. ஒவ்வொரு வீதியிலும் கூடிநின்ற பக்தர்கள் பெருமாளை வழிபட்டனர். பின்னர் 12 மணிக்கு தேர் நிலையை வந்தடைந்தது. அப்போது பக்தர்கள் கைதட்டி கரகோஷம் எழுப்பினர்.
இதில் திருமயம், அரிமளம், புதுக்கோட்டை மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தேரோட்டத்தையொட்டி ஆன்மிக சான்றோர்கள், பொதுமக்கள் சார்பில் ஆங்காங்கே நீர்மோர், அன்னதானம் வழங்கப்பட்டது. இதையொட்டி பக்தர்களின் வசதிக்காக புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் உத்தரவின்பேரில் திருமயம் போலீசார் செய்திருந்தனர். தொடர்ந்து புஷ்பஊரணியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், திருமெய்யர் அறக்கட்டளையினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.