

செங்குன்றம்,
சென்னையை அடுத்த புழல் காவாங்கரை திருநீலகண்டர் நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம், கட்டிட தொழிலாளி. இவரது மகன் அஜித்குமார் (வயது 20). இவர் சென்னை மாதவரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்த அஜித்குமார், தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து புழல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவர் அஜித்குமார் தற்கொலை செய்து கொண்ட அந்த அறையில் கடிதம் ஒன்று சிக்கியது. அந்த கடிதத்தை மாணவர் தற்கொலை செய்வதற்கு முன் எழுதி வைத்து இருந்தது தெரியவந்தது.
அந்த கடிதத்தில் அவர், நான் படிக்கும் கல்லூரியில் ஒரு பெண்ணை ஒருதலையாக காதலித்தேன். என் காதலை அந்த பெண் ஏற்காததால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொள்கிறேன் என்று எழுதியிருந்தது.
அந்த கடிதத்தை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.