யமுனா தற்கொலை: என்னுடைய கணவர் கொலை செய்யவில்லை, மனைவி பேட்டி

சென்னையை அடுத்த வானுவம்பேட்டை ரத்த பரிசோதனை மைய உரிமையாளர் ராஜாவின் மனைவி லலிதா சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
யமுனா தற்கொலை: என்னுடைய கணவர் கொலை செய்யவில்லை, மனைவி பேட்டி
Published on

சென்னை,

சென்னையை அடுத்த வானுவம்பேட்டை ரத்த பரிசோதனை மையத்தில் பெண் ஊழியர் யமுனா உயிரிழந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பரிசோதனை மையத்தின் உரிமையாளர் ராஜாவின் மனைவி லலிதா சென்னையில் நேற்று நிருபர்களிடம் கண்ணீருடன் அளித்த பேட்டி வருமாறு:-

எங்களுடைய ரத்த பரிசோதனை மையத்தில் யமுனா கடந்த ஒரு வருடமாக பணிபுரிந்து வந்தார். சம்பவம் நடந்த அன்று ரத்த பரிசோதனை முடிவை தவறாக கொடுத்ததற்கு என்னுடைய கணவர் ராஜா, அவரை திட்டியுள்ளார். 2 பேருக்கும் நடந்த வாக்குவாதத்தில் யமுனாவே தன் கையில் இருந்த ஸ்பிரிட்டை உடல் மீது ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்துகொண்டார்.

யமுனாவை காப்பாற்ற முயன்ற என்னுடைய கணவரின் 2 கைகளிலும் தீக்காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்களின் உதவியுடன் தீயை அணைத்து என்னுடைய கணவர் தான் ஆட்டோவில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். கொலை செய்ததாக அவர் மீது குற்றம்சாட்டுகிறார்கள். அப்படி என்றால், அவர் எதற்காக யமுனாவை காப்பாற்ற முயற்சிக்க வேண்டும்.

இந்த சம்பவத்தில் பல்வேறு உண்மையான விஷயங்கள் மறைக்கப்பட்டுள்ளன. என்னுடைய கணவர் யமுனாவை கொல்லவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com