ஏற்காட்டில் வடமாநில தம்பதி கொலையில் 3 பேர் கைது பரபரப்பு தகவல்கள்

ஏற்காட்டில் வடமாநில தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது.
ஏற்காட்டில் வடமாநில தம்பதி கொலையில் 3 பேர் கைது பரபரப்பு தகவல்கள்
Published on

ஏற்காடு,

ஏற்காட்டில் ஒரு எஸ்டேட்டில் ஜார்கண்ட் மாநிலம் கூட்டி கிராமத்தை சேர்ந்த ராம்பகன் மகன் கோண்டாபகன் (வயது 41), அவரது மனைவி சுதிகேன்ஸ் (36) ஆகியோர் கூலி வேலை செய்து வந்தனர். இவர்கள் அங்குள்ள பணியாளர் குடியிருப்பில் தங்கி இருந்தனர்.

கடந்த 29-ந்தேதி கணவனும், மனைவியும் வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இதுபற்றி ஏற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சேலம் ரூரல் துணை சூப்பிரண்டு உமாசங்கர், ஏற்காடு இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வடமாநில தம்பதி கொலை தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வந்தனர்.

இந்தநிலையில் ஏற்காடு அடிவாரத்தில் உள்ள சுங்கச்சாவடி அருகில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் இரட்டை கொலையில் அவருக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவருடைய பெயர் சுக்ராம் (21) என தெரியவந்தது.

மேலும் இந்த கொலை தொடர்பாக ராம்நாத் (39) மற்றும் முச்சுராய் (25) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த இவர்கள் ஏற்காட்டில் குடியிருந்து கூலி வேலை பார்த்து வந்தனர். கைதான 3 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த கொலை தொடர்பாக பூத்ரான், ஹைரா போத்ரே ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

கைதானவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.

போலீசாரால் தேடப்படும் பூத்ரான், கொலை செய்யப்பட்ட சுதிகேன்சின் உறவினர் ஆவார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பூத்ரான் மனைவி கர்ப்பமாக இருந்தார். அப்போது சுதிகேன்ஸ், பூத்ரான் மனைவியை பார்க்க அவருடைய வீட்டுக்கு வந்தார். பின்னர் பூத்ரான் மனைவிக்கு குழந்தை நன்றாக பிறக்க சுதிகேன்ஸ் நாட்டு மருந்து கொடுத்துள்ளார். அந்த மருந்தை சாப்பிட்ட மறுநாள் பூத்ரான் மனைவி இறந்தார். அந்த மருந்தை கொடுத்தது தான் மனைவி இறந்ததற்கு காரணம் என்று பூத்ரான் நினைத்து ஆத்திரம் அடைந்தார்.

எனவே உறவினர்களுடன் சேர்ந்து திட்டம் தீட்டி கோண்டாபகன், அவரது மனைவி சுதிகேன்ஸ் ஆகியோரை வீட்டில் வைத்து கொலை செய்துள்ளனர்.போலீசார் நடத்திய விசாரணையில் இந்த தகவல்கள் தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com