இன்சூரன்ஸ் பிரீமியத்திற்கு சரக்கு சேவை வரியை நீக்க வேண்டும்

இன்சூரன்ஸ் பிரீமியத்திற்கு சரக்கு சேவை வரியை நீக்க வேண்டும் என்று நெல்லையில் நடந்த காப்பீட்டு கழக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இன்சூரன்ஸ் பிரீமியத்திற்கு சரக்கு சேவை வரியை நீக்க வேண்டும்
Published on

நெல்லை,

காப்பீட்டு கழக ஊழியர் சங்க நெல்லை கோட்ட வெள்ளி விழா மாநாடு பாளையங்கோட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் கடந்த 3-ந் தேதி தொடங்கியது. மாநாட்டில், பொதுத்துறை நிறுவனங்கள் பாதுகாப்பு, ஆயுள் காப்பீட்டு கழகத்தின் பிரீமியத்தின் மீதான ஜி.எஸ்.டி. வரி நீக்கம், ஊழியர்களின் ஊதிய உயர்வு, பாலிசிதாரர்களின் சேவை மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மாநாட்டையொட்டி நேற்று காலையில் பேரணி நடந்தது. இந்த பேரணி பாளையங்கோட்டை எல்.ஐ.சி. அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு, வ.உ.சி. மைதானம் வழியாக மாநாடு நடந்த மண்டபத்தை வந்தடைந்தது. இந்த பேரணியில், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த காப்பீட்டு கழக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து மாநாட்டு நிகழ்ச்சி நடந்தது. கோட்ட தலைவர் மதுபால் தலைமை தாங்கினார். வரவேற்பு குழு தலைவர் லட்சுமணன் எம்.எல்.ஏ. வரவேற்று பேசினார். அகில இந்திய காப்பீட்டு கழக ஊழியர் சங்க தலைவர் அமானுல்லாகான், பொதுச்செயலாளர்கள் ரமேஷ், செந்தில்குமார், இணை செயலாளர் கிரிஜா ஆகியோர் பேசினார்கள்.

மாநாட்டில், எல்.ஐ.சி. ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனே தொடங்கவேண்டும். இன்சூரன்ஸ் பிரீமியத்திற்கு சரக்கு சேவை வரியை நீக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் பொதுச்செயலாளர் முத்துகுமாரசாமி நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com