தெப்பகுளத்தில் தவறி விழுந்த இளம்பெண் சாவு

விராலிமலையில் மீனுக்கு இரைபோடும்போது, தெப்பகுளத்தில் தவறி விழுந்த இளம் பெண் பரிதாபமாக இறந்தார்.
தெப்பகுளத்தில் தவறி விழுந்த இளம்பெண் சாவு
Published on

விராலிமலை, ஜூலை.25-
விராலிமலையில் மீனுக்கு இரைபோடும்போது, தெப்பகுளத்தில் தவறி விழுந்த இளம் பெண் பரிதாபமாக இறந்தார்.
தெப்பகுளம்
விராலிமலை தாலுகா விராலூர் கிராமம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் வீரன். இவரது மகள் லாவண்யா (வயது 18). இவர் கடந்த 20-ந் தேதி விராலிமலைக்கு அவரது தோழி யசோதாவுடன் வந்துள்ளார்.
பின்னர் இருவரும் விராலிமலை தெற்குதெருவில் உள்ள தெப்பகுளத்தில் மீன்களுக்கு இரை போடுவதற்காக படிக்கட்டில் இறங்கியுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக லாவண்யா கால் இடறி தண்ணீரில் விழுந்தார்.
சாவு
இதைக்கண்ட யசோதா அவரை காப்பாற்ற தண்ணீரில் குதித்தார். இருவருக்கும் நீச்சல் தெரியாததால் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தனர். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பெற்று வந்த லாவண்யா சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு இறந்தார். இதில் யசோதா குணம் அடைந்து வீடு திரும்பினார். இது குறித்த புகாரின் பேரில் விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com