ஆவடி அருகே இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை ஆர்.டி.ஓ. விசாரணை

ஆவடி அருகே இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால் சம்பவம் தொடர்பாக ஆர்.டி.ஓ. தலைமையில் விசாரணை நடக்கிறது.
ஆவடி அருகே இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை ஆர்.டி.ஓ. விசாரணை
Published on

ஆவடி,

ஆவடியை அடுத்த வீராபுரம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் டில்லிபாபு (வயது 31). இவருடைய மனைவி மாலதி (24). இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு சதீஷ்குமார் (5) என்ற மகனும், கனிஷ்கா (3) என்ற மகளும் உள்ளனர்.

டில்லிபாபு கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். இவர் வாரந்தோறும் சனிக்கிழமை காலை வந்து 2 நாட்கள் குடும்பத்தினருடன் தங்கி இருந்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை கோவை புறப்பட்டு செல்வது வழக்கம்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக மாலதி உடல் நிலை சரியில்லாமல் இருந்ததாக தெரிகிறது. மேலும் அவர் அவ்வப்போது நள்ளிரவில் எழுந்து புலம்பி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் அவருடைய உறவினர்கள் அவரை மருத்துவர்களிடம் அழைத்து சென்று சிகிச்சை அளித்ததோடு, பல்வேறு இடங்களில் உள்ள கோவில்களுக்கு அழைத்து சென்று பரிகாரங்களும் செய்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை வீட்டில் சேலையால் தூக்கு போட்டு மாலதி தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அவர்கள் மாலதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மேலும், டில்லிபாபுவுக்கும், மாலதிக்கும் திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால் திருவள்ளூர் ஆர்.டி.ஓ. தலைமையிலும் விசாரணை நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com