திருவள்ளூர் அருகே சாலையோர நிறுத்தத்தில் நின்ற போது விபத்து: பஸ் மோதி இளம் பெண் பலி

திருவள்ளூர் அருகே சாலையோரம் இருந்த நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்த போது, வேகமாக வந்த தனியார் பஸ் மோதி இளம்பெண் பலியானார்.
திருவள்ளூர் அருகே சாலையோர நிறுத்தத்தில் நின்ற போது விபத்து: பஸ் மோதி இளம் பெண் பலி
Published on

பஸ் மோதியது

திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் அருகே உள்ள கொருக்கம்பேடு கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி திலகவதி (வயது 35). திலகவதி காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

இந்தநிலையில், திலகவதி நேற்றுமுன்தினம் தன்னுடன் பணிபுரியும் அதே கிராமத்தை சேர்ந்த விமலா (30) என்பவருடன் வேலைக்கு செல்வதற்காக கொண்டஞ்சேரி பஸ் நிறுத்தம் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்தார்.

அப்போது, பூந்தமல்லியில் இருந்து அரக்கோணம் நோக்கி வேகமாக வந்த தனியார் பஸ் ஒன்று சாலையோரம் நின்று கொண்டிருந்த திலகவதி, விமலா ஆகியோர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

டிரைவருக்கு வலைவீச்சு

இதில் ரத்த வெள்ளத்தில் பலத்த காயமடைந்து கிடந்த 2 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே திலகவதி பரிதாபமாக இறந்து போனார். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட படுகாயம் அடைந்த விமலாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே விபத்தை ஏற்படுத்திய பஸ் டிரைவர் வண்டியை அங்கேயே விட்டு தப்பி ஓடி விட்டார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான டிரைவரை தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com