நாகர்கோவிலில் 2 குழந்தைகளை கொன்று இளம்பெண் தற்கொலை

நாகர்கோவிலில் 2 குழந்தைகளை கொன்று விட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகர்கோவிலில் 2 குழந்தைகளை கொன்று இளம்பெண் தற்கொலை
Published on

நாகர்கோவில்,

நாகர்கோவில் எஸ்.எல்.பி. தெற்கு தெருவை சேர்ந்தவர் அருணாசலம் (வயது 37). இவருடைய மனைவி சரண்யா (32). இவர்களுக்கு ரிப்கா (4) என்ற மகளும், ஐசக் ஆபிரகாம் (2) என்ற மகனும் இருந்தனர். அருணாசலம் ஆட்டோ ஓட்டி வருகிறார். ரியல் எஸ்டேட் வேலையும் அவ்வப்போது செய்து வருகிறார்.

இந்த நிலையில் அருணாசலம் நேற்று அதிகாலை 5 மணிக்கு சவாரிக்காக வீட்டில் இருந்து புறப்பட்டார். பின்னர் 7 மணி அளவில் மீண்டும் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் மெயின் ஹாலில் ரிப்காவும், ஐசக் ஆபிரகாமும் இறந்து கிடந்தனர். மேலும் வீட்டில் உள்ள மின் விசிறியில் சரண்யா தூக்கில் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்து அருணாசலம் கதறி அழுதார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

பின்னர் இதுபற்றி தகவல் அறிந்ததும் கோட்டார் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. அதாவது சரண்யா தன்னுடைய 2 குழந்தைகளையும் கொன்று உடல்களை அருகருகே வைத்துவிட்டு தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார்.

இது தொடர்பாக போலீசார் விசாரித்த போது திருமணத்தின் போது 20 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சம் வரதட்சணையாக கொடுத்ததாகவும், ஆனால் பணத்தை அருணாசலம் செலவு செய்துவிட்டார் என்றும், மேலும், நகையையும் விற்று விட்டதாகவும் தெரிகிறது. இதன் காரணமாக கணவனுக்கும், மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது தெரியவந்தது. இதனால் பல நாட்களாகவே மனவேதனையில் இருந்த சரண்யா, தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.

இந்த விபரீத முடிவால் தனக்கு பிறகு குழந்தைகளை கவனிக்க யாரும் இல்லையே? என்று நினைத்த அவர் தன் குழந்தைகளையும் உடன் அழைத்துச் செல்ல தீர்மானித்துள்ளார். பின்னர் மனதை கல்லாக்கி கொண்டு, நன்றாக தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகளின் கழுத்தை திடீரென சேலையால் இறுக்கியும், சத்தம் போடாமல் இருப்பதற்காக தலையணையை கொண்டு முகத்தை அழுத்தியும் உள்ளார். இதனால் சிறிது நேரத்தில் 2 குழந்தைகளும், துடிதுடித்தபடி இறந்தனர். அதன் பிறகு அவர் தூக்குப்போட்டு உயிரை மாய்த்து உள்ளார். இதைத் தொடர்ந்து 2 குழந்தைகள் மற்றும் சரண்யாவின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். இது தொடர்பாக சரண்யாவின் கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com