போலி நாகக்கல் வைத்திருந்த வாலிபர் கைது

போலி நாகக்கல் வைத்திருந்த வாலிபர் கைது

ஓட்டப்பிடாரம் அருகே போலி நாகக்கல் வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
Published on

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள ஓசனூத்து ஊரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 51). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் அதிகாலையில் ஓசநூத்து அருகே 9 பேர் தன்னை தாக்கி 2 செல்போன்கள் மற்றும் ரூ.4 ஆயிரத்தை பறித்துக் கொண்டு சென்றதாக ஓட்டப்பிடாரம் போலீசில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதுதொடர்பாக ஓட்டப்பிடாரம் அருகே உள்ள இந்திராநகரை சேர்ந்த மாரியப்பன் மகன் பவித்குமாரை (24) பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், சுப்பிரமணியனிடம் இருந்து செல்போன்கள், பணத்தை பறிமுதல் செய்யவில்லை என்றும், அவரிடம் இருந்து நாகக்கல்லை திருடிச் சென்றதாகவும் தெரிவித்தார்.

மேலும் விசாரணையில், சுப்பிரமணியன் புகாரில் உண்மை இல்லை என்பதும், பவித்குமாரிடம் இருந்த நாகக்கல், போலியான நாகக்கல் என்பதும் தெரியவந்தது. இதுதொடர்பாக பவித்குமாரை போலீசார் கைது செய்தனர். மேலும் போலி புகார் தெரிவித்த சுப்பிரமணியன் உட்பட அவரிடம் இருந்து போலி நாகக்கல்லை பறித்துச் சென்றதாக 11 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com