தவளக்குப்பத்தில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபர் கைது கூட்டாளிக்கு வலைவீச்சு

தவளக்குப்பத்தில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தவளக்குப்பத்தில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபர் கைது கூட்டாளிக்கு வலைவீச்சு
Published on

பாகூர்,

புதுவை மாநிலம் தவளக்குப்பம் அருகே டி.என்.பாளையத்தை சேர்ந்தவர் ராஜன் (வயது 48). விவசாயி. சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளை தவளக்குப்பம் நான்குமுனை சந்திப்பில் நிறுத்திவிட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது, மோட்டார் சைக்கிள் திருட்டு போயிருந்தது. அதனை மர்மநபர் யாரோ திருடிச்சென்றது தெரியவந்தது.

இது குறித்து தவளக்குப்பம் போலீஸ் நிலையத்தில் ராஜன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோட்டார் சைக்கிள் திருடிய மர்மநபரை தேடி வந்தனர்.

வாகன சோதனை

இந்த நிலையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு கொருக்குமேடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார்.

இதையடுத்து அவரை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று தீவிரமாக விசாரித்தனர். விசாரணையில் அவர் தவளக்குப்பம்- நல்லவாடு சாலையை சேர்ந்த ஆனந்தன் (20) என்பதும், அவர் ஓட்டி வந்தது டி.என்.பாளையம் ராஜனுக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள் என்பதும் தெரியவந்தது.

வாலிபர் கைது

ஆனந்தன், அதே பகுதியை சேர்ந்த நண்பர் அருள் என்பவருடன் சேர்ந்து கிருமாம்பாக்கம், முதலியார்பேட்டை, பெரியகடை பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ஆனந்தனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆனந்தனின் கூட்டாளி அருளை வலைவீசி தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட ஆனந்தன் மீது திட்டக்குடி, தவளக்குப்பத்தில் ஏற்கனவே வழிப்பறி, அடிதடி வழக்குகள் உள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com