போலி நகையை அடகு வைக்க முயன்ற வாலிபர் கைது

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஒரு அடகு கடையில் நேற்று வாலிபர் ஒருவர், 6 பவுன் நகையை அடகு வைக்க முயன்றார். அவரிடம் இருந்து நகையை வாங்கிய அடகு கடை உரிமையாளர், நகையை பரிசோதனை செய்தபோது அது போலி என தெரிந்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
போலி நகையை அடகு வைக்க முயன்ற வாலிபர் கைது
Published on

இதுபற்றி அடகு கடை உரிமையாளர் அளித்த புகாரின்பேரில் அரும்பாக்கம் போலீசார், அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்மநபரை தேடி வந்தனர். இதற்கிடையில் அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனி பஸ் நிலையம் அருகே நின்ற அந்த நபரை போலீசார் மடக்கி பிடித்து, அரும்பாக்கம் போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர். அதில் அவர், திருமுல்லைவாயலை சேர்ந்த சுரேந்தர் (வயது 34) என்பதும், தனது கூட்டாளி ஒருவர் அந்த போலி நகையை கொடுத்து அடகு வைத்து வரும்படி கொடுத்து அனுப்பியதாகவும் கூறினார்.

சுரேந்தர் மீது அரும்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவான அவரது கூட்டாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com