சாலை மராமத்து பணியின்போது முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

கிராம மக்கள் இந்த சாலையை தார் மூலம் தான் மராமத்து பணி மேற்கொள்ள வேண்டும் என்று கூறி லாரியை முற்றுகையிட்டு, சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Published on

மீன்சுருட்டி,

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே குண்டவெளி கிராமத்தில் இருந்து வெத்தியார் வெட்டு கிராமம் வரை சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் வரை பாரத பிரதமர் திட்டத்தின் கீழ் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னர் தார்ச்சாலை அமைக்கப்பட்டது. தற்போது இந்த சாலை குண்டும், குழியுமாக மாறியதால் அதனை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் கிராம மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், முதியவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று மாலை 4 மணியளவில் இந்த சாலையில் மராமத்து பணி நடைபெற்றது. பணியாளர்கள் குண்டும், குழியுமான சாலையில் சிமெண்டு கலந்த கலவையை போட்டு கொண்டு வந்த போது கிராம மக்கள் இந்த சாலையை தார் மூலம் தான் மராமத்து பணி மேற்கொள்ள வேண்டும் என்று கூறி லாரியை முற்றுகையிட்டு, சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த மீன்சுருட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவே அவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com