

சேந்தமங்கலம்,
கொல்லிமலை குண்டூர் நாடு ஊராட்சியில் உள்ள மருதாங்குளம்பட்டியை சேர்ந்தவர் தங்கையன், விவசாயி. இவருடைய 2-வது மகன் சரத் (வயது 15). இவர் செம்மேட்டில் உள்ள உண்டு, உறைவிட பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து இந்த ஆண்டு பொதுத்தேர்வு எழுதி இருந்தார்.
இந்த நிலையில் தேர்வு முடிவுகள் வெளியானதும், தனது மதிப்பெண்களை தெரிந்து கொள்ள பள்ளிக்கு மாணவர் சரத் சென்றார். அப்போது 420 மதிப்பெண் கிடைத்திருப்பதை கண்டு அந்த மாணவர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவர் தனது நண்பர்களிடம், நான் 480 மதிப்பெண் வரும் என்று எதிர்பார்த்து இருந்தேன், ஆனால் மதிப்பெண் குறைந்து விட்டது என்று மனவேதனையுடன் கூறியுள்ளார்.
இதையடுத்து வேதனையில் இருந்த சரத், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷத்தை குடித்து விட்டு மயங்கி கிடந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர், மாணவரை மீட்டு உடனடியாக செம்மேடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப் பட்டார்.
ஆனால் வழியிலேயே சரத் பரிதாபமாக இறந்து விட்டார். இது குறித்து வாழவந்தி நாடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.