காந்தி உருவ பொம்மையை சுட்டதற்கு எதிர்ப்பு; நாடு முழுவதும் காங்கிரசார் நாளை போராட்டம்

காந்தி உருவ பொம்மையை சுட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரசார் நாளை போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
Published on

புதுடெல்லி,

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் நினைவு நாள் நாடு முழுவதும் கடந்த 30ந்தேதி அனுசரிக்கப்பட்டது. இந்த நிலையில் உத்தர பிரதேச மாநிலம் அலிகார் இந்து மகா சபையின் தேசிய செயலாளர் சகுன் பாண்டே என்பவர் காந்தியின் உருவப்படத்தை தன் கையில் உள்ள துப்பாக்கியால் சுட்டுள்ளார். அதன் பின்னர் அவரது படத்தின் மேல் சிவப்பு நிற திரவம் தெளிக்கப்பட்டது. அதன் பின்னர் தனது ஆதரவாளர்களுடன் காந்தியின் உருவ பொம்மையை தீயிட்டுக்கொளுத்தினார்.

காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவின் சிலைக்கு, சகுன் பாண்டே தனது ஆதரவாளர்களுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் தனது ஆதரவாளர்களுக்கு இனிப்பு வழங்கினார். இவ்வாறு அவர் கொண்டாடியது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதற்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.

இந்த நிலையில், காந்தி உருவ பொம்மையை கைத்துப்பாக்கியால் சுட்டது மற்றும் நாதுராம் கோட்சே சிலைக்கு மாலை அணிவித்தது ஆகிய அகில பாரத இந்து மகா சபையின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து மாநில தலைமையகங்களிலும் நாளை காலை 10 மணி முதல் போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்து உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com