கொரோனா, நிசர்கா நெருக்கடிக்கு எதிராக அரசு போராடும் போது பா.ஜனதா அரசியல் செய்வது பரிதாபகரமானது - சிவசேனா தாக்கு

கொரோனா வைரஸ் பரவல், நிசர்கா புயல் பாதிப்பு ஆகிய நெருக்கடிகளுக்கு எதிராக அரசு போராடும் போது பா.ஜனதா அரசியல் செய்வது பரிதாபகரமானது என சிவசேனா தெரிவித்துள்ளது.
Published on

மும்பை,

மராட்டியத்தில் நிசர்கா புயலால் பாதிக்கப்பட்ட ராய்காட் மற்றும் கொங்கன் பகுதிகளை மாநில சிவசேனா கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரசின் தலைவர் சரத்பவார் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து பார்வையிட்டார். இது தொடர்பாக சரத்பவாரை பாரதீய ஜனதா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் விமர்சித்தார். சரத்பவார் இப்போது எப்படி விழித்தெழுந்தார் என கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பாக பாரதீய ஜனதாவை சிவசேனா சாடியுள்ளது. இதுபற்றி அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவின் தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:-

சரத்பவார் எப்போதும் விழிப்புடன் இருக்கிறார். அதனால் அவர் தனது அரசியல் நேரத்தை எப்போதும் சரியாக பெறுகிறார். 6 மாதங்களுக்கு முன் பாரதீய ஜனதா தலைவர்கள் நள்ளிரவில் விழித்தார்கள். அதிகாலையில் பதவியேற்பு விழாவை நடத்தினார்கள்.

அந்த சம்பவத்திற்கு பிறகு பாரதீய ஜனதா தலைவர்கள் இன்னும் விழித்து இருக்கிறார்கள். அவர்கள் ஆட்சிக்கு வந்து விட முடியுமா? என இன்னும் காத்து இருக்கிறார்கள். மராட்டியம் கொரோனா வைரஸ் மற்றும் நிசர்கா சூறாவளியை எதிர்த்து போராடிய போது பா.ஜனதா அரசியல் செய்வது பரிதாபகரமானது. நெருக்கடி காலங்களில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு எப்போது விழிப்புடன் இருக்கும்.

ஆனால் மத்திய அரசு விழிப்புடன் இருக்கிறதா என்பது தான் கேள்வி. அம்பன் சூறாவளி சேதத்தை மதிப்பிடுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி மேற்குவங்கத்துக்கு மத்திய குழுவை அனுப்பியது நல்லது.

நிசர்கா புயலால் பாதிக்கப்பட்ட மராட்டியத்துக்கு ஏன் மத்திய குழுவை அனுப்பவில்லை. இதுபற்றி சந்திரகாந்த் பாட்டீல் மத்திய அரசை கேள்வி கேட்டாரா?

மேற்கு வங்கத்தில் தேர்தல் நெருங்குவதால் அங்கு மத்திய அரசு உதவிகரம் நீட்டுகிறது. ஆனால் மராட்டியத்தில் இந்த சட்டசபையின் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் தேர்தலுக்கு சாத்தியம் இல்லை. இங்கு பாரதீய ஜனதா வெற்றி பெறாது என்பதும் தெளிவாகி உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com