புதுடெல்லி,
சென்னை ராயபுரம் அரசு குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகள் சிலருக்கு காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து அவர்களை பரிசோதனை செய்ததில் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அந்த காப்பகத்தில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் 35 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.
இந்த காப்பகத்தில் தமிழகம் முழுவதும் இருந்து குழந்தைகள் வந்து தங்கவைக்கப்பட்டு அழைத்துச் செல்லப்படுவதால், எவ்வாறு அங்கு கொரோனா தொற்று ஏற்பட்டது என்பதை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனையடுத்து உச்சநீதிமன்றம் இந்த விவகாரம் குறித்து தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது.
நாடு முழுவதும் உள்ள குழந்தைகள் காப்பகங்களில் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்த விவகாரம் குறித்து உரிய விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் இன்று தமிழக அரசு சார்பாக உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் ராயபுரம் அரசு காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.