சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மத்திய நெடுஞ்சாலைத் துறை மந்திரி நிதின் கட்காரிக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாட்டில் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், சென்னை மதுரவாயல் முதல் வாலாஜாபேட்டை வரையிலான சாலை மிக மோசமாக பராமரிக்கப்பட்டிருப்பது குறித்து சென்னை ஐகோர்ட்டு கடுமையான அதிருப்தியை தெரிவித்து இருக்கிறது. இது குறித்தும், இந்த சாலை முழுவதும் புதிதாக அமைக்கப்படும் வரை சுங்கக்கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை ஐகோர்ட்டே தாமாக முன்வந்து பொதுநல வழக்குப்பதிவு செய்திருப்பது குறித்தும் தங்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கும் என்று நம்புகிறேன். இவ்வழக்கில் தங்கள் அமைச்சகத்திற்கு சென்னை ஐகோர்ட்டு அறிவிக்கை அனுப்பியிருப்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
மொத்தம் 2,807 கி.மீ. நீளம் கொண்ட இந்த நெடுஞ்சாலையின் தென்பகுதி தொடக்கமே மிகவும் மோசமாக இருப்பது நல்லதல்ல. இந்த சாலையில் பெங்களூரு முதல் வாலாஜா வரையிலான சாலை 6 வழிப் பாதையாக்கப்பட்டுள்ள நிலையில், வாலாஜா முதல் சென்னை வரையிலான பாதை 4 வழிப்பாதையாகவே உள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ள நிலையில் அந்தப்பகுதியில் 8 வழிச்சாலை அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அனுமதிக்கப்பட்ட 6 வழிச்சாலைகூட இன்னும் அமைக்கப்படவில்லை. எனவே, இந்த விஷயத்தில் தாங்கள் தலையிட்டு, சென்னை முதல் வாலாஜாபேட்டை வரையிலான சாலையை தரமான 8 வழிச்சாலையாக மாற்ற ஆணையிட வேண்டும்.
அதேபோல், பல சுங்கச்சாலைகளுக்காக செய்யப்பட்ட முதலீடு எடுக்கப்பட்ட பிறகும் முழுமையான சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்கிறது. 45 எண் கொண்ட தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டை அடுத்த பரனூரிலும், திண்டிவனத்திற்கு முன்பாக ஆத்தூரிலும் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 2005-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் இந்த சாலை சுங்கக்கட்டண சாலையாக அறிவிக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த சாலை அமைக்க ரூ.536 கோடி மட்டுமே செலவானதாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சுங்கச்சாலை அமைக்கப்பட்டது முதல் 2018-ம் ஆண்டு செப்டம்பர் 30-ந்தேதி வரையிலான 13 ஆண்டுகள் 6 மாத காலத்தில் பரனூர், ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் ரூ.1,098 கோடி சுங்கக்கட்டணமாக வசூல் செய்யப்பட்டுள்ளது. அதன்பின் இப்போது வரை கூடுதலாக ரூ.150 கோடி வசூலிக்கப்பட்டிருக்கும். சாலை அமைக்க செலவிடப்பட்டதைவிட இரு மடங்கிற்கும் மேலாக கட்டணம் வசூலிக்கப்பட்டு விட்ட நிலையில், இன்னும் முழு கட்டணம் வசூலிப்பது ஏன்? என்ற வினாவுக்கு நெடுஞ்சாலைகள் ஆணையம் அளித்துள்ள பதில் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.
நெடுஞ்சாலை அமைக்க ரூ.536 கோடி மட்டும் தான் செலவிடப்பட்டது என்றாலும், அதற்கான பணிகள் தொடங்கப்பட்ட நாள் முதல் முடிவடைந்த நாள் வரை பணவீக்கம் கணக்கிடப்பட்டு, அதுவும் திட்டச்செலவில் சேர்க்கப்பட்டது. அதனால் திட்டச்செலவு ரூ.770.18 கோடியாக அதிகரித்து விட்டதாம். அதுமட்டுமின்றி, சுங்கக்கட்டணமாக வசூலிக்கப்பட்ட தொகையில் 4 சதவீதம் பராமரிப்புக்காக ஒதுக்கப் பட்டதுடன், இயக்கச் செலவுகள் என்ற பெயரில் 12 சதவீதம் கழிக்கப்பட்டது. இத்தகைய கழிவுகளுக்குப் பிறகு சுங்கக்கட்டணமாக ரூ.416.04 கோடி மட்டும் தான் வசூலிக்கப்பட்டிருப்பதாக கணக்கில் காட்டப்பட்டுள்ளது. ரூ.770 கோடி முதலீட்டை திரும்ப எடுக்க இன்னும் ரூ.354 கோடி தேவை என்றும், அதுவரை முழு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் நெடுஞ்சாலைகள் ஆணையம் கூறியுள்ளது. இதை எவரும் ஏற்க மாட்டார்கள்.
தமிழகத்தில் உள்ள அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் அவற்றை அமைப்பதற்கான உண்மையான செலவு, இதுவரை உண்மையாக வசூலிக்கப்பட்ட சுங்கக்கட்டணம் எவ்வளவு? என்பது குறித்து பணியில் உள்ள ஐகோர்ட்டு நீதிபதி, இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் (சி.ஏ.ஜி.) அலுவலக உயரதிகாரிகள் உள்ளிட்டோரைக் கொண்ட ஆணையம் அமைத்து விசாரணை நடத்த ஆணையிட வேண்டும்; விசாரணை முடிவடையும் வரை 10 ஆண்டுகளுக்கும் கூடுதலாக செயல்பட்டு வரும் சுங்கச்சாவடிகளில் பராமரிப்புக்காக 40 சதவீதம் கட்டணம் மட்டுமே வசூலிக்க ஆணையிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.