டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை: மனோகர் பாரிக்கரிடம் வெங்கையா நாயுடு நலம் விசாரித்தார்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், மனோகர் பாரிக்கரிடம் வெங்கையா நாயுடு நலம் விசாரித்தார்.
Published on

புதுடெல்லி,

கோவா மாநில முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் கணைய புற்றுநோயால் அவதிபட்டு வருகிறார். இதற்காக அவர் அமெரிக்காவில் சுமார் 3 மாதம் தங்கியிருந்து சிகிச்சை பெற்றார்.

அதன் பின்னர் கடந்த மாதம் முதல் வாரத்தில் அவர் நாடு திரும்பினார். அமெரிக்காவில் தீவிர சிகிச்சை பெற்றபோதும், அவருக்கு நோய் பாதிப்பு குறையவில்லை.

இதையடுத்து கடந்த மாதம் 15-ந் தேதி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மனோகர் பாரிக்கர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நேற்று எய்ம்ஸ் மருத்துவமனையில் மனோகர் பாரிக்கரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இது பற்றி வெங்கையா நாயுடு தனது டுவிட்டரில் கோவா மாநிலத்தின் முதல்-மந்திரி மனோகர் பாரிக்கரை எய்ம்ஸ் மருத்துவமனையில் சந்தித்து அவருடைய உடல் ஆரோக்கியம் குறித்து கேட்டறிந்தேன். அவர் நமது நாட்டின் மிகவும் அன்பான மற்றும் நேர்மையான மூத்த அரசியல்வாதிகளில் ஒருவர். அவர் விரைவில் குணமடைந்து வந்து எப்போதும் போல இந்த சமூகத்துக்கு சேவையாற்றுவார் என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளேன் என தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com