தஞ்சை பெரிய கோவிலில் 1 டன் பச்சரிசி சாதத்தால் பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் தரிசனம்

தஞ்சை பெரிய கோவிலில் உள்ள பெருவுடையாருக்கு 1 டன் பச்சரிசி சாதத்தால் அன்னாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
Published on

தஞ்சாவூர்,

தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு, உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவிலை மாமன்னன் ராஜராஜ சோழன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டினான். இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

ஆண்டுதோறும் ஐப்பசிமாத பவுர்ணமி நாளன்று சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடைபெறும். அதேபோல தஞ்சை பெரியகோவிலில் உள்ள பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம் நேற்று நடந்தது.

1 டன் பச்சரிசி சாதம்

இதற்காக பக்தர்களால் 1000 கிலோ(1டன்) பச்சரிசியும், 500 கிலோ காய்கனிகளும் வழங்கப்பட்டன. பக்தர்கள் வழங்கிய அரிசியை சாதமாக தயார் செய்து மாலையில் பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் காய்கனிகளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.

அன்னாபிஷேகத்தையொட்டி பெருவுடையாரை தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் திரண்டு இருந்தனர். அவர்கள் கோவில் வளாகத்தில் ஆங்காங்கே அமர்ந்த வண்ணம் இருந்தனர். மாலை 4.30 மணிக்கு அன்னாபிஷேகம் மற்றும் காய்கனிகளால் அலங்காரம் செய்யப்பட்டு நடை திறக்கப்பட்டதையடுத்து பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

சிவன்கோவில்கள்

இதேபோல் தஞ்சையில் உள்ள கொங்கணேஸ்வரர்கோவில், காசி விஸ்வநாதர் கோவில், வெண்ணாற்றங்கரையில் உள்ள தஞ்சபுரீஸ்வரர் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோவில்களிலும் நேற்று அன்னாபிஷேகம் நடந்தது. அனைத்து கோவில்களிலும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com