

கரூர்,
கரூரிலுள்ள கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கரூர் ஸ்ரீ மகா அபிஷேக குழு சார்பில் ஆடி மாதம் தெய்வதிருமணவிழா நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு தெய்வதிருமண விழாவானது கடந்த சில நாட்களுக்கு முன்பு பசுபதீஸ்வரர் கோவிலில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையொட்டி முளைப்பாரி வைக்கப்பட்டு புனிதநீர் ஊற்றப்பட்டது. நேற்று முன்தினம் கோவில் ராஜகோபுரத்திற்கு பிரமாண்ட மாலை சாத்தப்பட்டது. அதன் பின்னர் சீர்தட்டு எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கல்யாண பசுபதீஸ்வரர் சாமிக்கும், ஆனிலை அலங்காரவள்ளி-சவுந்தரநாயகிக்குமான தெய்வ திருமணம் நேற்று காலை பசுபதீஸ்வரர் கோவிலில் நடந்தது. இதையொட்டி ஹோமம் வளர்க்கப்பட்டு வேதமந்திரங்கள் ஓதப்பட்டன. பின்னர் திருமணத்திற்கான தாலியை தேங்காய்-பழத்துடன் இருந்த தாம்பூலத்தட்டில் வைத்து பக்தர்களிடம் காண்பித்தனர். அதனை பக்தர்கள் தொட்டு வணங்கி கொண்டனர். இதைத்தொடர்ந்து மணியளவில் மங்கல இசை வாத்தியங்கள் முழங்க பசுபதீஸ்வர சாமி, அலங்காரவள்ளி-சவுந்தரநாயகிக்கு தாலி கட்டி ஏற்று கொண்டார். அப்போது பக்தர்கள் ரோஜாப்பூ, மல்லிகை உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களை மணக்கோலத்தில் இருந்த சாமியின் மீது தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
திரளான பக்தர்கள் தரிசனம்
அதனை தொடர்ந்து மாலை மாற்றும் உற்சவம் நடந்தது. அப்போது பசுபதீஸ்வரர், அலங்காரவள்ளி, சவுந்தரநாயகி ஆகியோரது கழுத்தில் கிடந்த மாலைகள் அவர்களுக்குள்ளாகவே மாற்றி அணிந்து கொள்ளும் நிகழ்வு பக்தர்களுக்கு கண்கொள்ளா காட்சியாக அமைந்தது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் மொய் பணத்தை சமர்பித்து மணக்கோலத்தில் இருந்த சாமியை தரிசனம் செய்து சென்றனர். இதையடுத்து பட்டிமன்றம், இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடந்தன. திருமணம் ஆகாதவர்கள், குழந்தைபேறு வேண்டுபவர்கள் உள்ளிட்டோர் இந்த தெய்வ திருமணத்தில் பங்கேற்றால் சுபகாரியம் நிகழும். பிரிந்த தம்பதியர் சேரவும், 16 பேறுகளை பெறவும் பசுபதீஸ்வரர் அருள்பாலிப்பார் என ஐதீகமாக கருதப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆடி தெய்வதிருமண விழாவில் கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாட்டினை கருவூர் ஸ்ரீ மகா அபிஷேக குழுவினர் செய்திருந்தனர்.