சென்னை,
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தேர்தல் ஆணையர் பழனிசாமியை நேரில் சந்தித்து உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடைபெற்றதாக புகார் அளித்தார்.
திமுக வெற்றியை தடுத்து நிறுத்த அதிமுக, காவல்துறை, அதிகாரிகள் திட்டமிட்டு சதி செய்வதாகவும், திமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட வேண்டிய முடிவுகளை அறிவிக்காமல் உள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
மாவட்ட அளவில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால், தேர்தல் ஆணையரை நேரில் சந்தித்ததாக அவர் விளக்கமளித்தார்.
இதனை தொடர்ந்து உள்ளாட்சித்தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் செய்வதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுவை அவசர வழக்காக இன்று விசாரிக்க வேண்டும் என்று திமுக கோரிக்கை வைத்தது. வழக்கை, நாளை காலை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதிகள் சத்யநாராயணா, ஹேமலதா அமர்வு ஒப்புதல் அளித்தது.
உயர்நீதிமன்ற புதிய விதிமுறை காரணமாக இன்று விசாரிக்க இயலவில்லை என நீதிபதிகள் விளக்கம் அளித்தனர்.
இந்நிலையில் திமுக தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க தலைமை நீதிபதி ஏ.பி.ஷாஹி உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து நீதிபதிகள் சத்யநாராயணா, ஹேமலதா அமர்வு இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உள்ளது.