ஊரடங்கு காலத்தில் அரசு என்ன தடுப்பு நடவடிக்கை எடுக்கப்போகிறது? - கமல்ஹாசன் கேள்வி

ஊரடங்கு காலத்தில் அரசு என்ன தடுப்பு நடவடிக்கை எடுக்கப்போகிறது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
Published on

சென்னை,

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஒட்டு மொத்த தமிழகமும் 68 நாட்கள் ஊரடங்கில் இருந்து, மீளத் தொடங்கியிருக்கிறது. சென்னையை தவிர்த்து பிற பகுதிகளில் பரிசோதனையே செய்யாமல், கொரோனா சென்னைக்குள் மட்டுமே இருப்பது போன்ற பிம்பத்தை கட்டமைக்க முயல்வது, பிற மாவட்டத்தினரின் உயிரை அலட்சியப்படுத்தும் செயல். பரவலான பரிசோதனையை எல்லா மாவட்டத்திலும் செய்து, உண்மை நிலையை தெளிவுபடுத்தியிருந்தால், கொரோனாவிலிருந்து தப்பிக்க, சென்னையை விட்டு வெளியேறினால் போதும் என்ற மக்களின் மனநிலையையும், காவல் துறை சோதனை சாவடிகள் அமைத்து தடுக்கும் நிலையினையும் தவிர்த்திருக்கலாம்.

ஊரடங்கு என்பது தொற்று பரவலைத் தடுக்கும் முயற்சி தான். 300, 400 பேருக்கு மட்டும் பரிசோதனை செய்ததின் விளைவு, இந்த பொது முடக்கம் ஏற்பட்டு உள்ளது. தற்போது ஊரடங்கு காலத்திலாவது அரசு என்ன தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்போகிறது என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com