தாளவாடி,
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே பனக்கள்ளி கிராமத்தில் துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு நலவாழ்வு மையத்தை திறந்து வைத்தார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம், பாதுகாப்பு மற்றும் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு போதிய அனுபவம் இல்லை என்று கூறி வருகிறார்.
காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழல் அனைத்தும் மக்களுக்கு தெரியும், மேலும், நிர்மலா சீதாராமனுக்கு போதிய அனுபவம் உள்ளது என்பது குறித்தும் மக்கள் அனைவரும் அறிவார்கள். கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால் தான் பெட்ரோல்டீசல் விலை உயர்ந்து வருகிறது. ஒரே நேரத்தில் சட்டமன்றத்துக்கும், பாராளுமன்றத்துக்கும் தேர்தல் நடத்தப்படும்.
இவ்வாறு மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.