கடம்பூர் அருகே ஊருக்குள் புகுந்த யானை கூட்டம்: பொதுமக்கள் பட்டாசு வெடித்து விரட்டினர்

கடம்பூர் அருகே ஊருக்குள் புகுந்த யானை கூட்டத்தை பொதுமக்கள் பட்டாசு வெடித்து விரட்டினார்கள்.
Published on

டி.என்.பாளையம்,

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தி, பவானிசாகர், தாளவாடி, தலமலை, ஆசனூர், கேர்மாளம், டி.என்.பாளையம், கடம்பூர், விளாமுண்டி, ஜீர்கள்ளி என 10 வனச்சரகங்கள் உள்ளன.

இந்த வனப்பகுதிகளில் யானை, மான், சிறுத்தை, புலி, காட்டெருமை என ஏராளமான வனவிலங்குகள் வசிக்கின்றன. இதில் யானைகள் அடிக்கடி வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுவது வாடிக்கையாகி வருகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை கடம்பூரை அடுத்த கானக்குந்தூர் வனப்பகுதியில் இருந்து 10-க்கும் மேற்பட்ட யானைகள் வெளியேறி அருகே உள்ள ஊருக்குள் புகுந்தது. பின்னர் ஒரு விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்ய தொடங்கின. உடனே அப்பகுதி மக்கள் ஒன்று கூடி பட்டாசு வெடித்தும், தகர டப்பாக்களை தட்டி ஒலி எழுப்பியும் யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டினார்கள். மேலும் யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறாமல் இருக்க வனத்துறையினர் அகழி அமைத்து கண்காணிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com