கர்நாடக நில சீர்திருத்தத்திற்கு அவசர சட்டம் - முதல்-மந்திரி எடியூரப்பா பேச்சு

“கர்நாடக நில சீர்திருத்த சட்டத்தில் திருத்தம் கொண்டுவர அவசர சட்டம் பிறப்பிக்கப்படும். இதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து உள்ள நிலையில் இதுகுறித்து சித்தராமையாவிடம் பேசி ஒத்துழைப்பை கேட்பேன்” என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
Published on

பெங்களூரு,

கர்நாடக நில சீர்திருத்த சட்டத்தை திருத்தம் செய்ய கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் விவசாய நிலத்தை யார் வேண்டுமானாலும் வாங்கலாம். இதற்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த சட்ட திருத்தத்தை கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் நில சீர்திருத்த சட்ட திருத்தம் அவசியம் என்று முதல்-மந்திரி எடியூரப்பா விளக்கம் அளித்துள்ளார். பெங்களூரு எடியூர் வார்டில் இயற்கை உரத்தை உற்பத்தி செய்யும் மையம் மற்றும் சர்தார் வல்லபாய் பட்டேல் அகாடமி தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டு, அதனை தொடங்கி வைத்து பேசும்போது கூறியதாவது:-

தொழில் நிறுவனங்கள்

நில சீர்திருத்த சட்டத்தை பெரும்பாலான மாநிலங்கள் அமல்படுத்தி உள்ளன. அதேபோல் கர்நாடகத்திலும் நில சீர்திருத்த சட்டத்தில் சில திருத்தங்களை செய்ய முடிவு செய்துள்ளோம். இதன் மூலம் விவசாயிகள் பயன் பெறுவார்கள். கர்நாடகத்தில் தொழில் நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் தொடங்க வாய்ப்பு ஏற்படும்.

இந்த சட்ட திருத்தத்தை அவசர சட்டம் மூலம் அமல்படுத்த முடிவு செய்துள்ளோம். இதை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா எதிர்த்துள்ளார். சட்ட திருத்தத்திற்கு அவர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இது தொடர்பாக சித்தராமையாவிடம் பேசுவேன். இந்த சட்ட திருத்தத்தை அனைத்து தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.

மக்கும் தன்மை

எடியூர் வார்டில் இயற்கை உரம் தயாரிக்கும் மையம் தொடங்கப்பட்டுள்ளது. நகரில் சேரும் மொத்த குப்பையில் 60 சதவீதம் மக்கும் தன்மை கொண்டது. இதில் இருந்து உரத்தை தயாரிக்க முடியும். மேலும் குப்பை பிரச்சினையும் தீரும்.

இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com