கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமை செயலகத்தை பாப்ஸ்கோ ஊழியர்கள் முற்றுகையிட முயற்சி

கோரிக்கைகளை வலியுறுத்தி பாப்ஸ்கோ ஊழியர்கள் தலைமை செயலகத்தை முற்றுகையிட முயற்சித்தனர்.
Published on

புதுச்சேரி,

புதுவை பாப்ஸ்கோ ஊழியர்களுக்கு கடந்த 32 மாதங்களாக வழங்கப்படாத நிலுவை சம்பளத்தை வழங்க கடந்த 7 மாதங்களுக்கு முன் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் ரூ.7 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் ரூ.3 கோடி தொழிலாளர்களுக்கு இ.பி.எப். கட்டுவதற்காக செலுத்தப்பட்டது. ஆனால் இதுவரை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை.

இதற்கிடையே ஊரடங்கையொட்டி ஒரு மாத சம்பளம் வழங்குவதற்கான கோப்பில் நிதித்துறை செயலாளர் கையொப்பமிட்டு உடனடியாக ஒருமாத சம்பளத்தையாவது வழங்க வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதனை வலியுறுத்தி நேற்று காலை ஏ.ஐ.டி.யு.சி. பாப்ஸ்கோ தொழிற்சங்கத்தினர் 100-க்கும் மேற்பட்ட வர்கள் ஒன்று திரண்டு சென்று, தலைமை செயலகத்தை முற்றுகையிட முயன்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கேயே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஏ.ஐ.டி.யு.சி. பாப்ஸ்கோ தொழிற்சங்க தலைவர் ராஜி, செயலாளர் மாரியப்பன் ஆகியோர் தலைமை தாங்கினர். செயல் தலைவர் அபிஷேகம், மாநில பொதுச்செயலாளர் சேதுசெல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் முக்கிய நிர்வாகிகளை அழைத்து கூட்டுறவுத் துறை செயலாளர் ஆலீஸ்வாஸ் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பட்ஜெட்டில் அறிவித்தது போல உடனடியாக சம்பளம் வழங்கவேண்டும், அதன்பின் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதுபற்றி நடவடிக்கை எடுப்பதாக கூட்டுறவுத்துறை செயலாளர் உறுதி அளித்தார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com