கும்பகோணம்,
உரம் விலை உயர்வை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. கும்பகோணம் பழைய மீன்மார்க்கெட் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட துணை செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். திருப்பனந்தாள் ஒன்றிய தலைவர் குணசேகரன், செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் காமராஜ், துணை தலைவர் மேகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் செந்தில்குமார், செயலாளர் கண்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் ஜேசுதாஸ், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் நாகமுத்து, செயலாளர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
யூரியா, பொட்டாஷ் உள்ளிட்ட உரங்களின் விலை உயர்வை மத்திய, மாநில அரசுகள் திரும்ப பெற வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு பாரபட்சமின்றி கடன் வழங்க வேண்டும்.
உரம் பெறுவதற்கு ஆதார் அட்டை கட்டாயம் வேண்டும் என்ற நடைமுறையை கைவிட வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகளுக்கு கடன் வழங்க வேண்டும். விவசாய பாசனத்துக்கு ஆறுகளில் முறை வைக்காமல் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.