மும்பை,
மும்பை கல்பாதேவியை சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த வெள்ளிக்கிழமை மாலை மாயமானாள். இதுகுறித்து சிறுமியின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் சிறுமியை தேடிவந்தனர்.
இந்தநிலையில் கடந்த சனிக்கிழமை காலை சிறுமி அவளது வீட்டருகே உள்ள மாநகராட்சி குளியல் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டாள்.
சிறுமியை மர்மநபர்கள் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டதாக அவளது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். எனினும் போலீசார் நடத்திய விசாரணையில், சிறுமி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், சிறுமியின் குடும்பத்தில் 9 பேர் உள்ளனர். இவர்கள் கொலபா பகுதியில் பூ வியாபாரம் செய்து வருகின்றனர். சிறுமிக்கு அவளது பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து உள்ளனர். இதனால் திருமணத்துக்கு பயந்து சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து உள்ளார் என்றார்.