அணி தோல்வி அடைந்த நிலையில் சதம் அடித்த பேட்ஸ்மேன் போன்று உணர்கிறேன்; சசி தரூர்

அணி தோல்வி அடைந்த நிலையில் சதம் அடித்த பேட்ஸ்மேன் போன்று உணர்கிறேன் என்று முன்னிலை வகிக்கும் சசி தரூர் கூறியுள்ளார்.
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. கேரளாவில் திருவனந்தபுரம் மக்களவை தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிடும் சசி தரூர், எதிர்த்து போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளரை விட 48 ஆயிரத்து 731 வாக்குகள் முன்னிலை வகித்து வருகிறார். 2 முறை எம்.பி.யாக வெற்றி பெற்றுள்ள அவர் இந்த முறையும் வெற்றி பெறும் நிலையில் உள்ளார்.

இந்த தேர்தலில், பா.ஜ.க. 292 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றது. காங்கிரஸ் கட்சி 51 என்ற மிக குறைந்த தொகுதிகளிலேயே முன்னிலை வகிக்கின்றது. இதனால் அதிகளவு தொகுதிகளை கைப்பற்றி 2வது முறையாக மீண்டும் ஆட்சி அமைக்கும் வகையில் பா.ஜ.க.வை பிரதமர் மோடி வழிநடத்தி சென்றுள்ளார்.

இந்நிலையில், சசி தரூர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், 72 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டு 50 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளேன். எனது அணி தோல்வி அடைந்த நிலையில், சதம் அடித்த பேட்ஸ்மேன் போன்று நான் உணர்கிறேன் என அவர் கூறியுள்ளார். இது இனிப்பு கலந்த கசப்பு நிறைந்த உணர்வு. இதனை பிரதிபலிக்க எனக்கு சிறிதுநேரம் எடுக்கும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com