

சென்னை,
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்:- விழுப்புரம், புதுவை பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு வேதாந்தா நிறுவனம், அமெரிக்க நிறுவனம், ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஆகிய நிறுவனங்களுக்கு மத்திய பா.ஜ.க. அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியிருப்பதற்கு தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கின்ற நேரத்தில் இதுபோன்ற திட்டங்களுக்கு அனுமதி கொடுப்பது தேர்தல் விதிமுறை மீறல். ஆனால் அ.தி.மு.க.வின் ஆத்மார்த்த கூட்டணி கட்சியான பா.ஜ.க. தலைமையிலான அரசு, வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி. நிறுவனங்களுக்கு புதிதாக விழுப்புரம், புதுச்சேரி பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளைத் தோண்ட சுற்றுப்புறச்சூழல் அனுமதியும் கொடுத்துவிட்டு, மக்களிடம் கருத்தும் கேளுங்கள் என்று ஒப்புக்காக ஒரு வெற்று நிபந்தனையை விதித்து தமிழக விவசாயிகளின் வயிற்றில் ஓங்கி அடித்துள்ளது.
விவசாயத்துக்கு தண்ணீர் கிடைக்காமல் வறட்சி, குடிநீர்ப் பஞ்சம் என்று காவிரி டெல்டா பகுதிகள் மட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்ட மக்களும் தடுமாறித் தத்தளித்துக் கொண்டிருக்கின்ற நேரத்தில், வீட்டுக்குப் போகும் நேரத்தில் கூட தமிழக மக்களுக்கு வேதனை தருவோம், துரோகம் செய்வோம் என்று இப்படியொரு அபத்தமானதும், ஆபத்தானதுமான அனுமதியை பா.ஜ.க. அரசும், அ.தி.மு.க. அரசும் கைகோர்த்து அளித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
ஆகவே, மத்தியில் புதிய அரசு அமையும் வரை வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி. நிறுவனங்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளைத் தோண்ட அளிக்கப்பட்டிருக்கும் அனுமதியையும், அதன் மீதான தொடர் நடவடிக்கைகளையும் மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும். மத்திய பா.ஜ.க. அரசு, வேதாந்தா நிறுவனத்துடன் உள்ள நெருக்கத்தின் காரணமாக, ஒருவேளை நிறுத்தி வைக்க மறுத்து பிடிவாதமாக இருந்தால், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையமே நேரடியாகத் தலையிட்டு இந்த அனுமதியை நிறுத்தி வைக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
காவிரி டெல்டா மண்டலம் பாலைவனம் ஆவதைத் தடுக்க, தமிழக அரசே இது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு உடனடியாக கடிதம் எழுதி, இந்தத் திட்டத்துக்கு தடை விதிக்க வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்வதோடு, மக்கள் போராட்டத்துக்கு வித்திட வேண்டும் என எச்சரிக்க விரும்புகிறேன்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:- தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்திலும், அதையொட்டிய புதுச்சேரி ஒன்றியப் பகுதிகளிலும் ஹைட்ரோ கார்பன் வளம் குறித்து 32 இடங்களில் ஆய்வு நடத்த வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்திருக்கிறது. விவசாயத்தை அழிக்கும் வகையிலான ஹைட்ரோ கார்பன் திட்டங்களை தமிழ்நாட்டில் மத்திய அரசு தொடர்ந்து திணித்து வருவது கண்டிக்கத்தக்கது ஆகும். தமிழகத்திற்கு உணவு படைக்கும் நெற்களஞ்சியமாக திகழ்வது காவிரி பாசன மாவட்டங்கள் தான். கடலூர், விழுப்புரம் மாவட்டங்களும் அவற்றின் நீட்சியாக விவசாயத்தில் செழிக்கின்றன. அந்தப் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்தினால், அந்த மாவட்டங்கள் பாலைவனமாக மாறுவதை தடுக்க முடியாது.
தமிழகத்தின் வேளாண் மண்டலங்கள் தொடர்ந்து அதே நிலையில் நீடிப்பதையும், பாலைவனங்களாக மாறாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டு. அந்தக் கடமையை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாட்டில் எந்த பகுதியிலும் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் செயல்படுத்தப்படாது என்று மத்திய, மாநில அரசுகள் உத்தரவாதம் அளிக்க வேண்டும். அத்துடன், காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாகவும் அறிவிக்க வேண்டும்.