நிசர்கா புயல் பாதிப்புக்காக முதல்-மந்திரி அறிவித்துள்ள ரூ.100 கோடி சொற்ப அளவிலானது - தேவேந்திர பட்னாவிஸ் பேட்டி

நிசர்கா புயல் பாதிப்புக்காக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்துள்ள ரூ.100 கோடி நிதி மிகவும் சொற்பமானது என்று சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.
நிசர்கா புயல் பாதிப்புக்காக முதல்-மந்திரி அறிவித்துள்ள ரூ.100 கோடி சொற்ப அளவிலானது - தேவேந்திர பட்னாவிஸ் பேட்டி
Published on

மும்பை,

பாரதீய ஜனதாவை சேர்ந்த மராட்டிய முன்னாள் முதல்-மந்திரியும், தற்போதைய சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நிசர்கா புயல் ஏற்படுத்திய பாதிப்புக்காக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்துள்ள ரூ.100 கோடி மிகவும் சொற்பமானது.

கடந்த ஆண்டு மாநிலத்தின் சில பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்ட போது, எனது அரசு சத்தாரா, சாங்கிலி மற்றும் கோலாப்பூருக்கு ரூ.4,708 கோடியும், நாசிக் மற்றும் கொங்கனுக்கு ரூ.2,108 கோடியும் கொடுத்தது.

ரூ.75 ஆயிரம் கோடி அளவுக்கு கடன்களை திரட்ட மத்திய அரசு அனுமதித்து இருந்தது. அதன்படி இந்த அரசு கடன்கள் மூலம் நிதி திரட்டி மக்களுக்கு உதவி வழங்க வேண்டும்.

மாநிலத்தின் கொரோனா பாதிப்பு 35 ஆயிரமாக இருந்த போதும், சோதனை திறன் 10 ஆயிரமாக தான் இருந்தது. பொருளாதாரத்தை மீட்டு மாநிலத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான மாநில அரசாங்கத்தின் மிஷன் பிகின் அகெய்ன் நல்ல திட்டம் தான். ஆனால் அதற்கு முழு எந்திரத்தின் ஆதரவும் தேவை.

கொரோனா சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளில் 80 சதவீத படுக்கைகள் கையகப்படுத்தப்படும் என்று அரசு அறிவித்தது. ஆனால் அது அறிவிப்பாகவே இருக்கிறது. ஏனெனில் செல்வாக்கு மிக்க தனியார் மருத்துவமனைகள் இந்த திட்டத்தில் இருந்து வெளியேறிவிட்டன.

மகா விகாஷ் அகாடி கூட்டணியில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லை. இதனால் உத்தவ் தாக்கரே அரசாங்கம் கொள்கை மற்றும் செயல் முடக்கத்தால் பாதிக்கப்பட்டு உள்ளது. மராட்டியத்தில் தான் ஊரடங்கு முதலில் அமல்படுத்தப்பட்டது. இதனால் ஊரடங்கை செயல்படுத்தியதில் மராட்டியத்தை தான் மத்திய அரசு பின்பற்றியதாக சிவசேனா கூறியது. ஆனால் இப்போது ஊரடங்கு சரியில்லை என்று கூறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com