புதுடெல்லி,
பிரிக்கப்படாத ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநரின் ஆலோசகராக இருந்த கே.விஜயகுமார் ஐபிஎஸ், உள்துறை அமைச்சகத்தின் மூத்த பாதுகாப்பு ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 1975-ம் வருட பேட்ச், ஐபிஎஸ் அதிகாரியான கே.விஜயகுமார், "ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் மற்றும் நக்சல் பாதிப்பு மிக்க மாநிலங்களுக்கான பாதுகாப்பு பிரச்சினைகளில் அமைச்சகத்திற்கு ஆலோசனை வழங்குவார்.
உள்துறை அமைச்சகம் கடந்த 3 ஆம் தேதி, கே.விஜயகுமார் நியமனம் குறித்த உத்தரவை வெளியிட்டுள்ளது. பதவி ஏற்றதில் இருந்து ஓராண்டுக்கு இப்பொறுப்பில் அவர் இருப்பார் எனவும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் பொது இயக்குநர் மற்றும் தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குநர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வகித்துள்ள கே.விஜயகுமார் தமிழ்நாட்டைசேர்ந்தவர் ஆவார். கடந்த 2004 ஆம் ஆண்டு வீரப்பனை சுட்டுக்கொன்ற சிறப்பு படை பிரிவின் தலைவராகவும் செயல்பட்டுள்ளார்.
கே விஜயகுமார் ஓய்வுக்கு பிறகு, ராஜ்நாத் சிங் தலைமையிலான உள்துறை அமைச்சகத்தின் மூத்த பாதுகாப்பு ஆலோசகராகவும் செயல்பட்டுள்ளார்.