பாகிஸ்தான் முன்னாள் அதிபர் மு‌ஷரப் மீதான தேசத்துரோக வழக்கு விசாரனை ஒத்திவைப்பு

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் மு‌ஷரப் (வயது 72), தனது ஆட்சிக்காலத்தில் 2007–ம் ஆண்டு, நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார்.
Published on

இஸ்லாமாபாத்,

அரசியல் சாசனத்தை இடைநீக்கம் செய்தார் முஷரப். அதனை தொடர்ந்து அங்கு ஜனநாயக ஆட்சி மலர்ந்த பிறகு, அவர் மீது தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டது.

அத்துடன் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை வழக்கிலும் அவரது பெயர் சேர்க்கப்பட்டது. முஷரப் மீதான தேசத்துரோக வழக்கில், அவர் வெளிநாடு செல்ல தடைவிதிக்கப்பட்டது.

ஆனால் கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம், இந்த தடை நீக்கப்பட்டது. அதன் பின்னர் மருத்துவ சிகிச்சை என்ற பெயரில் துபாய்க்கு சென்றார். சிகிச்சை முடிந்து அடுத்த சில வாரங்களில் அல்லது மாதங்களில் நாடு திரும்புவேன் என அப்போது கூறிய நிலையில், இன்று வரை அவர் நாடு திரும்பவில்லை.

இந்த நிலையில், முஷரப் மீதான தேசத்துரோக வழக்கு பாகிஸ்தானின் சிறப்பு கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதில் முஷரப் ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வழக்கம் போல் அவர் அதனை தவிர்த்தார்.

மாறாக அவர் தனது வக்கீல் மூலம் நீதிபதிகளிடம் ஒரு கோரிக்கை வைத்தார். ரம்ஜான் பண்டிகை முடியும் வரை அதாவது ஜூன் 4 வரை, தன் மீதான தேசத்துரோக வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். அதே சமயம் வழக்கு விசாரணைக்கு தான் ஆஜராகாததற்கு மன்னிப்பு கோரினார்.

முஷரப்பின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணை ஜூன் 12ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com