நடிகை ஷில்பா ஷெட்டி, கணவர் மீது மோசடி புகார்; போலீஸ் விசாரணை

இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோர் சத்யுக் என்ற தங்க வியாபார நிறுவனத்தில் இயக்குனர்களாக இருந்தனர்.
Published on

மும்பை,

சத்யுக் நிறுவனத்தில் சச்சின் ஜோஷி என்ற வெளிநாட்டு வாழ் இந்தியர் 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் ரூ.18 லட்சத்து 58 ஆயிரத்துக்கு சுமார் 1 கிலோ தங்கத்துக்கான தங்க அட்டையை வாங்கி உள்ளார். 5 ஆண்டுகளுக்கு பிறகு அவருக்கு அந்த அட்டைக்கான தங்கம் வழங்கப்படும் என நிறுவனம் சார்பில் உறுதி அளிக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் சச்சின் ஜோஷி, அந்த தங்க வியாபார நிறுவனத்தில் எடுத்து இருந்த 5 ஆண்டு திட்டம் முடிந்தது. எனவே அவர் தங்க அட்டையை கொடுத்து ஒரு கிலோ தங்கத்தை வாங்குவதற்காக பாந்திரா குர்லா காம்ப்ளக்சில் உள்ள அந்த நிறுவனத்தின் அலுவலகத்திற்கு சென்றார். அப்போது அந்த அலுவலகம் மூடப்பட்டு இருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து விசாரித்தபோது, தங்க நிறுவனத்தின் இயக்குனர் பொறுப்பை நடிகை ஷில்பா ஷெட்டியும், அவரது கணவர் ராஜ் குந்த்ராவும் சில ஆண்டுகளுக்கு முன்பே ராஜினாமா செய்தது தெரியவந்தது.

இதையடுத்து சச்சின் ஜோஷி, நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா மீது கார் போலீசில் மோசடி புகார் அளித்தார். இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com