புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு காரில் கடத்தி வரப்பட்ட 750 லிட்டர் சாராயம் பறிமுதல்

புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு காரில் கடத்தி வரப்பட்ட 750 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார். தப்பி ஓடிய டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
Published on

கடலூர்,

கடலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வேதரத்தினம் உத்தரவின் பேரில் கடலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா தலைமையில் போலீசார் பெரியகங்கணாங்குப்பம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து கடலூர் நோக்கி வேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காருக்குள் சாக்கு மூட்டைகள் இருந்தன. அதில் ஒன்றை பிரித்து பார்த்தபோது உள்ளே ஏராளமான சாராய பாக்கெட்டுகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மொத்தம் 25 சாக்குமூட்டைகளில் 750 லிட்டர் சாராய பாக்கெட்டுகள் இருந்தன. இதனிடையே டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

இதையடுத்து காரில் இருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் புதுச்சேரி அரியாங்குப்பம் அருந்ததிபுரத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் மணிகண்டன்(வயது 35) என்பதும், தப்பி ஓடிய டிரைவர் அரியாங்குப்பத்தை சேர்ந்த சுரேஷ் என்பதும் தெரியவந்தது.

மேலும் அரியாங்குப்பத்தில் இருந்து சாராய பாக்கெட்டுகளை ஏற்றிக்கொண்டு கடலூர் முதுநகர் அருகே உள்ள ஆலப்பாக்கம் பகுதியில் இறக்கி வைத்துவிட்டு வர தங்களுக்கு உத்தரவிடப்பட்டதாகவும் போலீசாரிடம் மணிகண்டன் கூறினார்.

இதையடுத்து மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். மேலும் ரூ.1 லட்சம் மதிப்புள்ள 750 லிட்டர் சாராய பாக்கெட்டுகள், அதனை கடத்த பயன்படுத்திய கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். சுரேசை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com