செஞ்சி,
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியில் சமீபத்தில் பெய்த தொடர் மழை காரணமாக செஞ்சி, அப்பம்பட்டு, ஜெயங்கொண்டான், பாடிப்பள்ளம் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெல், உளுந்து உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன. இதனால் பாதிக்கப்பட்ட செஞ்சி பகுதி விவசாயிகள் மழையால் சேதமடைந்த பயிர்களை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில் செஞ்சி பகுதிக்குட்பட்ட பாடிபள்ளம், அப்பம்பட்டு உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல், வெங்காயம், உளுந்து பயிர்களை கலெக்டர் அண்ணாதுரை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதோடு, பயிர்கள் சேதம் குறித்து வேளாண்மைத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்து, சரியான முறையில் கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று அறிவுறுத்தினார். ஆய்வின்போது மாவட்ட கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், வேளாண்மை இணை இயக்குனர் ரகுராமன், தாசில்தார் கோவிந்தராஜன் மற்றும் வேளாண்மைத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.