புதுச்சேரி,
புதுவை அரசின் உள்ளாட்சித்துறை மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை திறந்தவெளி கழிப்பிடமற்ற பிரதேசமாக அறிவிக்கும் விழா கம்பன் கலையரங்கில் நேற்று நடந்தது. விழா காலை 10 மணிக்கு தொடங்கியது.
அதற்கு முன்னதாக முக்கிய பிரமுகர்கள் விழா நடக்கும் இடத்துக்கு வந்தனர். தொகுதி எம்.எல்.ஏ.வும், அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் அங்கு வந்து உள்ளாட்சித்துறை செயலாளர் ஜவகரிடம் விழா அழைப்பிதழை காட்டி அழைப்பிதழில் பெயர் போடப்பட்டு தனக்கும், ராதாகிருஷ்ணன் எம்.பி.க்கும் விழாவில் பேசுபவர்கள் வரிசையில் இடமளிக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அவரை அமைச்சர் நமச்சிவாயம் சமாதானப்படுத்தினார். விழாவில் பேச வாய்ப்பு வழங்குவதாக கூறி மேடைக்கு அழைத்து சென்றார். பின்னர் விழா தொடங்கியதும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் இயக்குனர் ருத்ரகவுடு வரவேற்ற பின்பு தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் கழிப்பறைகள் கட்டியது தொடர்பாக வீடியோ காட்சி காட்டப்பட்டது.
அதைத்தொடர்ந்து வாழ்த்தி பேச அன்பழகன் எம்.எல்.ஏ. அழைக்கப்பட்டார். அவர் பேச தொடங்கியதும், தனக்கு பேச வாய்ப்பளிக்கப்படாதது தொடர்பாக அதிகாரிகள் மீது குற்றஞ்சாட்டினார். அரசியலமைப்பு சட்டப்படி எம்.எல்.ஏ.க்களுக்கு கொடுக்கப்பட்ட உரிமையை பறிக்கும் அதிகாரத்தை அதிகாரிகளுக்கு யார் கொடுத்தது? என்றும் கேள்வி எழுப்பினார்.
தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் தூய்மைபணிகளுக்கு கவர்னர் முக்கியத்துவம் கொடுத்து அதிகாரிகளை விடுமுறை நாட்களிலும் அழைத்து வேலைவாங்குவதை பாராட்டி தமிழில் பேசினார். அதை ஆங்கிலத்தில் கவர்னரிடம் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
தான் எதிர்க்கட்சியை சேர்ந்தவன் என்பதால் தனது தொகுதி புறக்கணிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டிய அவர் தனது தொகுதியின் குறைகளை நேரில் வந்து பார்க்குமாறு கவர்னருக்கு கடிதம் கொடுத்ததாகவும், அவர் வந்து பார்வையிடவில்லை என்றும் தனது அதிருப்தியை தெரிவித்தார்.
இதற்கிடையே நேரம் ஆகிவிட்டதாக கூறி அதிகாரி ஒருவர் பேச்சை முடித்துக்கொள்ளுமாறு அன்பழகன் எம்.எல்.ஏ.விடம் கவர்னரின் அறிவுறுத்தலின்பேரில் குறிப்பு ஒன்றை கொடுத்தார். அதை படித்து பார்த்த அன்பழகன் எம்.எல்.ஏ. தொடர்ந்து பேசினார். அப்போது அரசு ஊழியர்கள் சரியான நேரத்துக்கு பணிக்கு வருவதில்லை என்றும், துப்புரவு தொழிலாளிகளோ உரியநேரத்தில் வந்து பணி செய்கிறார்கள். அவர்களுக்கு பணி பாதுகாப்போ, அரசால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச கூலியோ வழங்கப்படுவதில்லை என்றும் குறிப்பிட்டார்.
இந்தநிலையில் 2-வது முறையாக அதிகாரி ஒருவர் கவர்னரின் அறிவுறுத்தலின்பேரில், பேச்சை முடித்துக்கொள்ளுமாறு கூறி துண்டு சீட்டு ஒன்றை அன்பழகன் எம்.எல்.ஏ.விடம் கொடுத்தார். ஆனால் அதை படித்துக்கூட பார்க்காமல் அன்பழகன் எம்.எல்.ஏ. மடித்து வைத்துக்கொண்டார். தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.
இதைத்தொடர்ந்து தனது இருக்கையில் இருந்து எழுந்து அன்பழகன் எம்.எல்.ஏ.விடம் வந்த கவர்னர் கிரண்பெடி பேச்சை முடித்துக்கொள்ளுமாறு கூறினார். ஆனால் அன்பழகன் எம்.எல்.ஏ. அதை கண்டுகொள்ளாமல் பேசிக்கொண்டிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த கவர்னர் கிரண்பெடி மைக் இணைப்பினை துண்டிக்குமாறு அதன் அமைப்பாளரிடம் கூறினார். இதைத்தொடர்ந்து மைக் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து கவர்னர் கிரண்பெடியும், அன்பழகன் எம்.எல்.ஏ.வும் மேடையில் நேருக்கு நேர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைக்கண்டு அமைச்சர்களும், அதிகாரிகளும் செய்வதறியாது திகைத்தபடி நின்றனர். ஒருவொரையொருவர் வெளியே போகச் செல்லும்படி கைகளை ஆட்டி சத்தமாக கூறினர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. என்னை வெளியே போக சொல்ல நீங்கள் யார்? உங்கள் வேலையை அமைச்சர்களிடம் வைத்துக்கொள்ளுங்கள் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. கவர்னரை பார்த்து கூற மேடையில் இருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இதற்கிடையே அமைச்சர் நமச்சிவாயமும், ராதாகிருஷ்ணன் எம்.பி.யும் சுதாரித்துக்கொண்டு அன்பழகன் எம்.எல்.ஏ.வை சமரசப்படுத்த முயன்றனர்.
ஆனால் அவர்களது முயற்சியில் பலிக்கவில்லை. கவர்னர் கிரண்பெடியும், அன்பழகன் எம்.எல்.ஏ. நேரடி வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அரசு விழாவுக்கு அழைத்துவிட்டு இப்படித்தான் அவமானப்படுத்துவீர்களா? என்று கேள்வி எழுப்பியபடி அன்பழகன் எம்.எல்.ஏ. மேடையில் இருந்து இறங்கி சென்றுவிட்டார்.
அதன்பின் அவர் சபாநாயகர் வைத்திலிங்கத்தை சந்தித்து அரசு விழாவில் நடந்த சம்பவம் தொடர்பாகவும், தான் அவமானப்படுத்தப்பட்டது தொடர்பாகவும் புகார் தெரிவித்தார். அன்பழகன் எம்.எல்.ஏ. விழாமேடையை விட்டு சென்றதும் பொதுக்கழிப்பிடங்களை சிறப்பாக பராமரித்தவர்களுக்கு சான்றிதழ்களை கவர்னர் கிரண்பெடி வழங்கினார். விழாவில் அவர் பேசுவது தொடர்பாக நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்றிருந்தும் ஏதும் பேசாமல் அதிகாரிகளை கடிந்துகொண்டு விழாவில் இருந்து பேசாமல் சென்றுவிட்டார்.