கமல்ஹாசனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் எச்.ராஜா பேட்டி

கமல்ஹாசனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று எச்.ராஜா கூறினார்.
Published on

மதுரை,

மதுரை மாவட்டம் சோழவந்தானில் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து இந்துக்களுக்கு எதிராக பேசி வருகிறார். இந்துக்கள் குறித்து அவதூறாக பேசிய கமல்ஹாசனை தமிழக அரசு குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இதுதொடர்பாக தமிழக அரசை வலியுறுத்தியுள்ளோம். சதுரகிரி மலை கோவிலில் அன்னதான மடங்கள் மூடப்பட்டுள்ளது பக்தர்களை ஏமாற்றும் செயல். கோவில் பகுதியில் குடிநீர் கேன்கள் ரூ.100-க்கு விற்கப்படுவது வேதனை அளிக்கிறது. கோவில் இணை ஆணையர் அங்குள்ள கடைக்காரர்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு, அதற்கு அனுமதி அளித்துள்ளார்.

குடிநீர் ரூ.100-க்கு விற்பனை என்று சொல்லும் போதே உரிய நடவடிக்கை எடுக்காமல் அன்னதான மடங்களை மூட உத்தரவிட்டது கண்டிக்கத்தக்கது. எனவே சதுரகிரி கோவில் இணை ஆணையர், நிர்வாக அதிகாரிகளை உடனடியாக இடைநீக்கம் செய்ய வேண்டும். அன்னதான கூடங்களை திறக்க மீண்டும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com