

நியூயார்க்,
உலக அளவில் தற்போது அதிக மக்களால் பயன்படுத்தப்படும் செயலிகளில் மிக முக்கியமானது வாட்ஸ்-அப்.
தொடக்கத்தில் செய்திகளை பரிமாறும் வசதி மட்டும் இருந்த இந்த செயலியில் தற்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்தல், வாய்ஸ் காலிங், வீடியோ காலிங் போன்ற பல்வேறு வசதிகளை வாட்ஸ்-அப் நிறுவனம் கொண்டு வந்துள்ளது.
வீடியோ, புகைப்படங்கள், கோப்புகள் என பல முக்கிய விஷயங்கள் வாட்ஸ்-அப் மூலம் பகிரப்படுவதால் பாதுகாப்பு அம்சங்களில் அந்நிறுவனம் மிகுந்த கவனம் கொண்டுள்ளது.
இந்நிலையில் வாட்ஸ்-அப்பில் ஹேக்கர்கள் ஊடுருவ முயன்றதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சில பயனாளர்களை மட்டும் குறிவைத்து திறன்பெற்ற ஹேக்கர்கள் இந்த சதி வேலையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹேக் செய்யப்பட வேண்டிய ஆட்களுக்கு ஹேக்கர்கள் வாட்ஸ் அப் அழைப்பு விடுத்து, அதன் மூலம் செயலியை கண்காணிக்கும் சாப்ட்வேர் ஒன்றை குறிப்பிட்ட செல்போனில் பயனாளர்களுக்கே தெரியாமல் பதிவிறக்கம் செய்துவிடுவார்கள் என வாட்ஸ்-அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன் ஹேக்கர்களின் அச்சுறுத்தல் இருப்பதால் பயனாளர்கள் அனைவரையும் உடனடியாக வாட்ஸ்-அப் செயலியை அப்டேட் செய்யக் கோரி அந்நிறுவனம் வலியுறுத்தி உள்ளது.