கொடைக்கானலில் பலத்த காற்றுடன் மழை, மரங்கள் முறிந்து விழுந்ததால் மின் வினியோகம் பாதிப்பு - பொதுமக்கள் கடும் அவதி

கொடைக்கானலில் பலத்த காற்றுடன் பெய்த மழைக்கு மரங்கள் முறிந்து மின்சார கம்பிகள் மீது விழுந்தன. இதனால் மின் வினியோகம் பாதிப்படைந்ததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
Published on

கொடைக்கானல்,

கொடைக்கானல் பகுதியில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் நேற்று பலத்த காற்றுடன் மழை தொடர்ந்து பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் சுற்றுலா இடங்களை காண முடியாமல் பாதிப்பு அடைந்தனர். வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

மழையின்போது பலத்த காற்று வீசியதில் கொடைக்கானல்-மல்லி ரோடு, பர்ன்ஹில் ரோடு, நாயுடுபுரம் செல்லும் சாலை மற்றும் பேத்துப்பாறை உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் முறிந்து சாலையிலும், மின்சார கம்பிகள் மீதும் விழுந்தது. ஒரு சில இடங்களில் பலத்த காற்றுக்கு மின்சார கம்பங்கள் சாய்ந்தன.

கொடைக்கானல் நகர் பகுதி, பேத்துப்பாறை உள்ளிட்ட பல இடங்களில் பலத்த காற்றுக்கு மரங்கள் முறிந்து மின்சாரகம்பிகள் மீது விழுந்ததால் அவை அறுந்து மின் வினியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். இதையடுத்து மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மேத்யூ தலைமையில் 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் விரைந்து சென்று மரங்களை அகற்றி மின் வினியோகத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

கொடைக்கானலை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் மழையின் காரணமாக மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் நகரில் உள்ள பல தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் முதல் நேற்று காலை 8.30 மணி வரை போட் கிளப்பில் 30.5 மி.மீட்டரும், அப்சர்வேட்டரியில் 30 மி.மீட்டரும் மழை அளவு பதிவானது.

X

Daily Thanthi
www.dailythanthi.com