செங்குன்றம்,
சென்னை அடுத்த புழல் விநாயகபுரம் துளசி நகரைச் சேர்ந்தவர் அருள்ராஜ். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இவருடைய மனைவி சரண்யா (வயது 38). இவர் கொளத்தூர் அருகே உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் வேலை செய்து வருகிறார்.
புழல் புத்தகரம் ரேவதி நகரை சேர்ந்தவர் சங்கீதா (39). இவர் சரண்யாவின் நெருங்கிய தோழி ஆவார். இந்த நிலையில் சரண்யா வீட்டிற்கு சங்கீதா அடிக்கடி வருவது வழக்கம். சில தினங்களுக்கு முன்பு சரண்யா வீட்டை பூட்டிக்கொண்டு வேலைக்கு சென்றுவிட்டார்.
அவர் வீட்டை பூட்டிவிட்டு சாவியை ஜன்னல் ஓரமாக வைப்பதை தெரிந்து கொண்ட சங்கீதா, நேற்று முன்தினம் சரண்யா வீட்டிற்கு வந்து சாவியை கொண்டு வீட்டை திறந்தார்.
பின்னர், வீட்டின் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 5 பவுன் தங்க நகைகள் ரூ.20 ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்று விட்டார்.
இதையடுத்து, வேலை முடிந்து வீட்டிற்கு சரண்யா வந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த நகை, பணம் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து சரண்யா புழல் போலீசில் புகார் செய்தார். குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில்உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அப்போது அதில், சரண்யா வீட்டிற்கு சங்கீதா வந்து திருடி விட்டு திரும்பி செல்வது பதிவாகியிருந்தது.
இதைத்தொடர்ந்து, போலீசார் சங்கீதாவிடம் துருவித்துருவி நடத்திய விசாரணையில், திருடியதை அவர் ஒப்புக்கொண்டார்.
புழல் போலீசார் அவரை கைது செய்து 5 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.5 ஆயிரம் பறிமுதல் செய்தனர். இது குறித்து சங்கீதாவிடம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.