அய்யம்பேட்டை அருகே மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரும் சாவு சாவிலும் இணை பிரியாத தம்பதி

அய்யம்பேட்டை அருகே மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரும் இறந்தார். சாவிலும் அந்த தம்பதி இணை பிரியாதது கிராம மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Published on

அய்யம்பேட்டை,

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே உள்ள தோட்டக்காடு ஊராட்சி ஆலங்குடி அண்ணாநகரை சேர்ந்தவர் கலியபெருமாள் (வயது85). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி பட்டு (80). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி விட்டது.

கலியபெருமாளும், அவரது மனைவி பட்டுவும் தங்கள் மகன்களுடன் வசித்து வந்தனர். நேற்று காலை 11 மணி அளவில் வயது முதிர்வின் காரணமாக பட்டு திடீரென இறந்தார்.

மயங்கி விழுந்தார்

பல ஆண்டுகளாக தன்னுடன் இணை பிரியாமல் வாழ்ந்து வந்த பட்டுவின் திடீர் மரணம் கலியபெருமாளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் மனைவியின் உடல் அருகே கண்ணீர் சாரை, சாரையாக ஊற்ற மிகுந்த சோகத்துடன் அமர்ந்து இருந்தார். அவரை பார்த்து உறவினர்களும் கதறி அழுதபடி இருந்தனர்.

நீண்ட நேரமாக அழுது கொண்டிருந்த கலியபெருமாளுக்கு அவருடைய உறவினர்கள் ஆறுதல் கூறினர். ஆனால் அவர் எந்த ஆறுதலையும் ஏற்றுக்கொள்ளாமல் மனைவி பிரிந்ததை நினைத்து நினைத்து மேலும் துயரம் அடைந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் கலியபெருமாள் திடீரென மயங்கி விழுந்தார்.

இறுதி சடங்கு

அவரை உறவினர்கள் எழுப்பியபோது அவரும் மனைவியுடன் விண்ணுலகிற்கு பயணமானது தெரியவந்தது. மனைவி இறந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் கணவரும் இறந்தது கிராம மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

சாவிலும் இணை பிரியாத அந்த தம்பதியின் உடல்கள் ஒரே இடத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. அவர்களுடைய இறுதி சடங்குகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் என கிராம மக்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com