பாகூர்,
புதுச்சேரி மாநிலம் அபிஷேகப்பாக்கம் பால்வாடி தெருவை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 49), ஜோதிடர். இவரது 2-வது மனைவி சித்ரா (42). இவர்களுக்கு குழந்தை இல்லை. இதற்காக கோவில்களில் பூஜை செய்து வழிபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் சித்ரா பக்கத்து வீட்டு பெண்களிடம் நீண்ட நேரம் பேசியதாக கூறப்படுகிறது. இதுபற்றி மனைவிடம் கேட்டு, நாகராஜ் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த சித்ரா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர், உடல் கருகி ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சித்ரா பரிதாபமாக இறந்துபோனார். இது குறித்து தவளக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நியூட்டன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.