

தென்தாமரைகுளம்,
கைவினை பொருட்கள் செய்யும் பயிற்சி மையத்தில் பனைப்பொருட்கள் மற்றும் நார் பொருட்களிலிருந்து கலை வண்ணத்துடன் கூடிய அழகிய பொருட்கள் செய்ய பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மையத்தில் 150 பெண்கள் இலவச பயிற்சி பெற்று வருகின்றனர். பயிற்சி பெற்ற பெண்களுக்கு கைவினை கலைஞர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி கோட்டையடியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பயிற்சி மையத்தின் நிறுவனர் அருள் ஹெப்சிபா தலைமை வகித்தார். சென்னை கைவினை பொருள்கள் வளர்ச்சி ஆணையத்தின் தென்மண்டல இயக்குனர் பிரபாகரன் மற்றும் கைவினை பொருட்கள் வளர்ச்சி ஆணையத்தின் மாவட்ட உதவி இயக்குனர் ரூப் சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு கைவினை கலைஞர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.
மண்டல இயக்குனர் பிரபாகரன் பேசும்போது, கைவினை பொருட்கள் தயாரிக்கும் தொழில் சிறந்து விளங்குகின்ற 40 பெண்களுக்கு மத்திய அரசின் சார்பில் தேசிய விருதும் ஒரு லட்சம் ரொக்கப் பணமும் தங்கப்பதக்கமும் வழங்கப்படுகிறது. இதைப்போல இன்னும் சில விருதுகள் மாநில மத்திய அரசுகளால் அறிவிக்கப்பட்டுள்ளது. அவைகளை பெறுவதற்கு நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். என்றும், இங்கு வழங்கப்படும் இந்த அடையாள அட்டையின் மூலம் என்னென்ன பலன்களை பெறலாம் என்பது பற்றியும் பேசினார். நிகழ்ச்சியில் கைவினை கலைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.