

செங்கம்,
செங்கத்தை அடுத்த மேல்புழுதியூர் அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியை முத்துகமலி (வயது 30). இவர் தண்டராம்பட்டு ஒன்றியத்திற்கு தேர்தல் பணிக்காக கடந்த 27-ந் தேதி சென்றிருந்தார். தேர்தல் பணியை முடித்துவிட்டு மறுநாள் காலை சுமார் 10 மணியளவில் முத்துகமலியும், அவரது கணவர் விஜயகுமாரும் மோட்டார் சைக்கிளில் வளையாம்பட்டு அடுத்த குமாரசாமிபாளையத்தில் உள்ள தங்களது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.
வளையாம்பட்டு சாலையில் சென்று கொண்டிருந்த போது சாலை வளைவில் எதிர்பாராதவிதமாக தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இதில் முத்துகமலிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தொடர்ந்து சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிசிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு முத்துகமலி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து செங்கம் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விஜயகுமார் செங்கம் அருகே உள்ள மேல்செங்கம் அரசு பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 1 வயதில் பெண் குழந்தை உள்ளது. முத்துகமலியின் சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் வல்லநாடு பகுதியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.